Wednesday 30 April 2014

கல்லூரி கலாட்டாக்கள் - பகுதி 1



கல்
லூரி கலாட்டாக்கள்


கல்லூரிப் பருவம் பற்றி நான் புதிதாக எதையும் சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். நம் வாழ்வில் மறக்க முடியாத விஷயங்களை பட்டியலிட்டால், அப்பட்டியலில் நம் கல்லூரி வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நிறைய இடம் பெறும் என நினைக்கிறேன்.

பொறியியல் படிப்பின் முதல் ஆண்டில் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்திருந்த நான், இரண்டாம் ஆண்டில் நான்காம் வரிசைக்கு முன்னேறி, பின் மற்ற இரண்டு ஆண்டுகளை கடைசி வரிசையில் உட்கார்ந்து முன்னேற்றத்தின் உச்சத்தை அடைந்தேன்.

ஏகப்பட்ட கலாட்டாக்கள், சிரிப்புகள், கிண்டல்கள், ரவுசுகள், கூச்சல்கள் நிறைந்தவை கல்லூரிப் பருவம். இப்பகுதியில், என் கல்லூரிப் பருவத்தில் கல்லூரியில், வகுப்பறையில், வெளியில் நிகழ்ந்த / நான் நிகழ்த்திய கலாட்டாக்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்பகுதியை வாசிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் கல்லூரிப் பருவத்தை ஒரு முறை அசை போடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

பின் குறிப்பு: என்னைப் பற்றி ஏற்கனவே தெரிந்த என் பள்ளி, கல்லூரி நண்பர்களுக்கு இப்பதிவில் வரும் சம்பவங்களும், என் சேட்டைகளும், ரவுசுகளும் பரிச்சயமாக இருக்கக்கூடும்.

Disclaimer: The stunts are performed by professionals. Audiences are requested not to try to copy these stunts at home / school / college / anywhere.

கலாட்டா - 1:

2001-ம் ஆண்டு என நினைக்கிறேன். பொறியியல் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வகுப்பு நேரம் காலை 7:30 மணியிலிருந்து பகல் 1:15 வரை. கல்லூரிப் பேருந்து பகல் 2, 2:15 மணிக்கு எடுப்பார்கள். வீட்டுக்கு வருவதற்கு அரை மணி நேரமாகும்.

அப்போதெல்லாம் அனைவருக்கும் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் வகுப்பு கட்டாயமாக இருக்கும். அன்று அந்த வகுப்புக்கான சீருடையில்தான் வர வேண்டும். ஆண்களுக்கு கரும்பச்சை நிற சர்ட், பேண்ட், பெண்களுக்கு ஒரு கரும்பச்சை நிற கோட்டு என நினைக்கிறேன்.

அன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. கல்லூரிக் காலம் என்றாலே பல திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்பதும் ஒரு அர்த்தம். நானும் சில நண்பர்களும் அன்று எப்படியாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

ஒர்க்ஷாப்பில் இருந்த சூப்பர்வைசரிடம் சாக்கு சொல்லிவிட்டு, நானும் என் நண்பன் ஒருவனும் பகல் 1:15 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்தோம். கால் மணி நேரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தும் ஒரு பேருந்துகூட வரவில்லை. இப்படியே போனால், படத்தை பார்க்க முடியாதே என்ற பயம் மெல்ல தலைகாட்டியது.

என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் புல்லட்டில் அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தார். கை நீட்டி அவரை நிறுத்தினோம்.
அவரிடம் நான், “சார், என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. அவசரமா போகணும் சார்” என்றேன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்ததால் அவரும் நம்பிவிட்டார் போலும்.

“எந்த ஹாஸ்பிட்டல் தம்பி? எங்கே போகணும்?” இது அவர்.

“மம்மி ஹாஸ்பிட்டல் சார்”

“சரி, வேகமா ஏறு”

உடனே என் நண்பன் புல்லட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். நான் அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். அவர் வேகமாக வண்டியை ஓட்டினார்.

சித்தூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தோம். அங்கிருந்து திரையரங்கு இருக்கும் இடத்திற்கு நேரடிப் பேருந்து நிறைய உண்டு என்பதால் அங்கு இறங்கிக் கொள்வதாக சொன்னோம்.

அப்போது அவர், “வேணும்னா நானே உங்களை மம்மி ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிட்டு போறேன்” என்றார். பாவம், நல்ல மனிதர்.

அதற்கு என் நண்பன், “இல்லை சார் பரவாயில்ல. போற வழியில் இன்னொரு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு அவனையும் கூட்டிக்கிட்டு போகணும். ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றான். அவரும் அதற்கு சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு சென்றுவிட்டார்.

நானும் நண்பனும் அங்கிருந்து நேராக திரையரங்கிற்குச் சென்று ஒரு வழியாக முதல் நாளே படத்தைப் பார்த்து, ஜென்ப சாபல்யத்தை அடைந்தோம்.

கலாட்டா – 2:

பொறியியல் இரண்டாம் ஆண்டு என நினைக்கிறேன். வகுப்பில் நுழைந்தபோது நண்பர்கள் வழக்கம்போல அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

என் வரிசைக்குச் சென்று பையை வைத்துவிட்டு உட்கார்ந்தேன். அப்போது, முன் வரிசையில் இருந்த ஒரு நண்பன் ஒரு மாதிரி திரும்பிப் பார்த்தான்.

“என்ன டா அப்படி பார்க்கறே?” என்று கேட்டேன்.

அதற்கு அவன், “கழுத்து, முதுகு பிடிச்சிருக்குடா” என்றான் அப்பாவியாக.

“யாருக்குடா?” என்றேன்.

“எனக்குத்தாண்டா” என்றான் அவன்.

“சரி, உன் கழுத்து, முதுகு எல்லாம் உனக்காவது பிடிச்சிருக்கே. அது பெரிய விஷயம்டா” என்றேன் நக்கலுடன்.

அதைக் கேட்டு கடுப்பாகிப் போன அவன், “டேய், நானே கழுத்து பிடிச்சிருக்குதேன்னு வலியில கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இதுல உனக்கு நக்கல் வேறயா. நீயெல்லாம்...” என்று தொடர்ந்தான். ஆனால் அவன் சொன்னது என் காதில் விழவில்லை (நம்புங்க :P).

கலாட்டா – 3:

பொறியியல் மூன்றாம் ஆண்டு. புனே, அஜந்தா, எல்லோரா டூர் சென்றிருந்தோம். ரயிலில் காட்பாடியிலிருந்து புனே சென்று அங்கிருந்து பேருந்தில் செல்வதாக திட்டம். 20 மணி நேர ரயில் பயணம்.
ரயிலில் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு, மனமே இல்லாமல் அப்பர் பர்த்திலிருந்து இறங்கி, கீழே இருக்கையில் உட்கார்ந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அங்கு வந்த நண்பன் ஒருவன், “என்னடா வெங்கட், இங்க உக்காந்துட்டிருக்கே?” என்று கேட்டான்.

உடனே எழுந்து நின்று “ஏண்டா கேக்கறே?” என்றேன் நான்.

“இல்லடா சும்மாதான். ஏன் நிக்கறே?” என்று கடுப்பேற்றினான்.

அதற்கு நான், என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “அது ஒன்னுமில்லடா. மறுபடியும் உக்காரனுமே, அதுக்குத்தான் இப்போ நிக்கறேன்” என்றேன்.

இந்த பதிலை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான் என நினைக்கிறேன். அப்போது நடையை கட்டினவன்தான், அந்த ரயில் பயணத்தில் அதற்குப்பிறகு அவனைப் பார்த்ததாக நினைவில்லை.

கலாட்டா – 4:

புனேவிலிருந்து பேருந்தில் சில இடங்களுக்குச் சென்றோம். அங்கிருந்து சில பேர் ஒரு குரூப்பாக நடராஜா சர்வீஸில் ஊர் சுற்ற கிளம்பினோம். மாலை 6 மணிக்கு அந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டுமென்பதால், அதற்கு முன் பேருந்தில் இருக்கவேண்டும் என சொல்லியிருந்தனர்.

நாங்கள் வெளியே சுற்றிவிட்டு திரும்பியபோது மணி 6:30 ஆகியிருந்தது. ரயிலில் என்னிடம் கேள்வி கேட்டு வாங்கிக்கொண்ட அதே நண்பன், முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு, பேருந்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தான்.

நாங்கள் அப்போது அங்கு வந்து சேர்ந்தோம். எங்களிடம் அவன், “ஏண்டா, எத்தனை தடவை சொன்னோம் சீக்கிரம் வாங்கன்னு. காது செவுடா உங்களுக்கு? ஏன் இவ்ளோ லேட்டா வர்றீங்க?” என்றான் கோபமாக.

அதற்கு நான், “அது ஒன்னுமில்லடா, சீக்கிரம் வரமுடியல. அதான் லேட்டு” என்றேன். உடன் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க கடுப்பில் பேருந்துக்குள்ளே சென்றான் அவன்.

Sunday 27 April 2014

மறக்க முடியாத முகங்கள் - 4

மறக்க முடியாத முகங்கள் – 4:

சென்ற மாதம், அலுவல் நிமித்தமாக ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் அங்கு இருக்க வேண்டும். காரணம் ‘டீம் பட்ஜெட் நிலைமை.

ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு இந்த மூன்று வார்த்தைகள் ‘டீம் பட்ஜெட் நிலைமைபரிச்சயமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இதை எப்படி விளக்குவது? ஆங், யோசனை வந்துவிட்டது.

அதாவது, ‘டீம் பட்ஜெட் நிலைமை என்பது ஒரே ஒரு தோசையை மூன்று, நான்கு பேருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான ஒரு சாக்கு.
யாருக்கும் வயிறு நிரம்பாது. அதே நேரத்தில், நம் மேனேஜர் ‘நான் உனக்காவது கால் தோசை கொடுத்தேன். மற்றவர்களுக்கு அதுகூட இல்லை என்ற சாக்கு சொல்லிச் சொல்லியே தப்பிப்பதற்கு உதவும். இதுதான் ‘டீம் பட்ஜெட் நிலைமை.

வெளிநாட்டுப் பயணம் என்பதால் விமானம் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அதாவது அதிகாலை 4 மணி விமானத்திற்கு 1 மணிக்கே அங்கு இருக்க வேண்டும். அதற்கு வீட்டிலிருந்து 12 மணிக்கே கிளம்ப வேண்டும். அவ்வளவு தூரம்.

என்னை பிக்-அப் செய்ய டேக்ஸி டிரைவர் 11:30 மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார். இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு எல்லா பொருட்களையும் சரிபார்த்து கொண்டிருந்தேன்.

12 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். டாடா இண்டிகா நின்று கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் சற்று தூரத்தில் இருந்து வந்தார் ஓட்டுனர். நெற்றியில் விபூதிப் பட்டை. அவருக்கு அது மிகப் பொருத்தமாக இருந்தது.

லக்கேஜை வண்டியினுள் வைத்துவிட்டு, உள்ளே உட்கார்ந்தேன். வண்டி படுசுத்தமாக இருந்தது. சாமி பொம்மை, ஊதுவத்தி வாசனை, சில பழங்கள் என அந்த இடமே மணந்தது.

வண்டியை கிளப்பினார். சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அழகான தமிழில் பேசினார். “என் சொந்த ஊர் மதுரை சார் என்றார். ஆச்சரியப்படவில்லை.

“அப்படீங்களா? நான் வேலூர் ஆள் சார்என்றேன். அதற்கு அவர், “நெனச்சேன் சார். உங்க பேச்சு கொஞ்சம் முரட்டுத்தனமும், நக்கலும் கலந்ததா இருக்கும்போதே நீங்க வட ஆற்காடு மாவட்டத்துல இருந்து வர்றீங்கன்னு நெனச்சேன் என்றார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.

அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. சொந்த ஊரிலிருந்து 7 வயதிலேயே தன் தங்கையுடன் இங்கு வந்துவிட்டாராம். சொத்துப் பிரச்சனை காரணமாக அவருடைய பெற்றோரை உறவினர்களே ஆளை வைத்து கொன்றுவிட்டார்களாம். அவர்களிடமிருந்து தப்பித்து இங்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.

பெங்களூருக்கு வந்து சில நாட்களிலேயே இவர்களை ஒருவர் தத்தெடுத்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே ஒரு மகள். இப்போது இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள்.

இவருக்கு நடந்தது காதல் திருமணம். இப்போது இவருக்கு 50 வயதாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். திருமணமாகி செட்டிலாகிவிட்டனர் மகன் பொறியியல் படிப்பு படித்து வருகிறான்.

நன்றாக செட்டில் ஆகிவிட்டீர்களே, பிறகேன் டேக்ஸி ஓட்டி உடம்பை வருத்திக் கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன வியப்பில் ஆழ்த்தியது.

“தினமும் காலைல 6 மணிக்கெல்லாம் எழுந்து முதல் வேலையா குளிச்சுடுவேன். அப்பறம் சாமி ரூம்ல உக்காந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பூஜை பண்ணுவேன்

“அப்பறம் சாப்பிட்டுட்டு வேலைன்னு வெளியே கிளம்பிடுவேன். வேலை செய்யாம என்னால சாப்பிட முடியாது, தூங்க முடியாது. நிம்மதி போயிடும் சார். ஞாயித்துக்கிழமை மட்டும் ரெஸ்ட். மத்த நாள்ல வேலை செஞ்சே ஆகணும்

இதையெல்லாம் கேட்டபிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் டாபிக்கை மாற்றினேன். “உங்க தங்கை எங்கே இருக்காங்க சார்? செட்டில் ஆகிட்டாங்களா? என்று கேட்டேன்.

“எனக்கு ரெண்டு தங்கைன்னு சொன்னேனே, ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. இங்க எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்காங்க

“அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. வீட்டுக்கு வந்து, ஏதாவது பிடிச்சுப்போச்சுன்னா.. புடவைன்னு வெச்சுக்கங்களேன்.. அவங்க பாட்டுக்கு பீரோவை திறந்து எடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க. என் மனைவியும் ஒரு வார்த்தை பேசாம, அவங்க கேட்டதை எடுத்து கொடுத்துடுவாங்க. அவங்க உடுத்தியிருக்கற புடவையா இருந்தாலும் அதேதான் என்றார்.

ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனைவியா? என்று வியந்தேன் நான். அவர் தொடர்ந்தார்.

“இப்படிப்பட்ட ஒரு மனைவியை நான்தானே சார் ஒழுங்கா பாத்துக்கணும். இன்னும் எத்தனை வருஷம் என் உடம்பு ஒத்துழைக்குதோ, அத்தனை வருஷம் என் மனைவிக்காக உழைப்பேன் சார் என்று அவர் சொல்லும்போது விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

இறங்கி லக்கேஜ் எடுப்பதற்கு வெளியே வந்தபோதுதான் அவர் கண்களைப் பார்த்தேன். கலங்கியிருந்தன. அதைப் பார்த்தவுடன் என் கண்களும் கலங்க ஆரம்பித்தன.

அவரிடம் விடைபெற்று, நான் விமான நிலையத்தினுள் நுழைந்தேன். சிந்தனையெல்லாம் அவரைப் பற்றிதான்.


அவரை நான் எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன் என நினைக்கிறேன். அப்படியொரு மறக்க முடியாத முகம் அது.