தீக்குளிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!
ஒரு அரசியல் தலைவருக்கு
எதிராக தீர்ப்பு வருகிறது. சிறைத்தண்டனை உறுதி என்கிறது அந்தத் தீர்ப்பு.
இதைக் கேட்டதும் அந்த
அரசியல் தலைவரின் கட்சியும், தொண்டர்களும், அபிமானிகளும், அவரது மாநிலமும், ஏன், ஒட்டுமொத்த
நாடுமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.
அவரது அபிமானிகள்
வருந்துகின்றனர். கட்சித் தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர். இத்தனை பெரிய அநீதியை
இழைத்துவிட்டதே இந்த நீதித்துறை என்று உஷ்ணம் தலைக்கேறி, சாலைகளில் தங்கள்
கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றனர். அதுவும் எப்படி?
அப்பாவி மக்களின்
கடைகளையும், உடைமைகளையும், வண்டிகளையும் அடித்து நொறுக்குகின்றனர்.
கண்ணாடி ஜன்னல்கள்,
கதவுகள் எல்லாம் அடித்து நொறுக்கப்படுகின்றன.
கடைகளில் உள்ள சாமான்கள்
தெருவில் போட்டு உடைக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் செய்து
அலுத்துப் போனால், அடுத்த குறி பேருந்துகள். அதுவும் இருக்கவே இருக்கிறது அரசுப்
பேருந்துகள். ரொம்ப சவுகரியம்.
இதில் ஒரே ஒரு நல்ல பண்பு
என்னவென்றால், பேருந்தில் உள்ள மக்களை பேருந்தைவிட்டு வெளியே துரத்திவிட்டு, அதன்
பிறகே பேருந்தைக் கொளுத்துகின்றனர். உண்மையில் மனிதம் இந்த அளவிலாவது இன்னமும்
இருக்கிறதே என்று நினைத்து நிம்மதியடையலாம்.
இந்த சம்பவங்களில்
கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. என்ன தெரியுமா?
இவற்றையெல்லாம்
செய்பவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்றாகத் தெரிந்தே செய்பவர்கள்.
அதனால்தான் மற்றவர்களின் சொத்துக்களை, பொதுச் சொத்துக்களை நொறுக்குகிறார்கள். இவர்களை
யார் தட்டிக் கேட்கப் போகிறார்கள்?
நம் கண் முன்னே, பெரிய
ஆயுதமொன்றை எடுத்துக்கொண்டு ஒருவர் நம்மை அடிக்க வந்தால், முதலில் நாம்
அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்றுதான் நினைப்போம். இதுதான்
இயற்கை. இதைத்தான் வன்முறையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்
கொள்கிறார்கள்.
எத்தனை வன்முறையாளர்கள் தங்களின்
அரசியல் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக தங்களின் சொந்த வீட்டை, வண்டியை
கொளுத்தியிருக்கிறார்கள்? தங்களின் சொந்த கடைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்?
இவர்கள் ஒரு ரகம் என்றால்,
இன்னொரு ரக தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் இவர்களுக்கு ஒரு படி மேல்.
தங்களின் தலைவனுக்கு /
தலைவிக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிட்டதே என்று பொங்கி, உணர்ச்சிவசப்பட்டு,
விரக்தியின் உச்சத்துக்கே போய், தங்களை தீயிட்டுக் கொள்பவர்கள் / தீக்குளிக்க முயல்பவர்கள்தான்
இந்த இரண்டாம் ரகம்.
“மத்தவங்களுக்கு கொடுக்கறதுதான்
உன்னோடது. அதுவும் நீ கொடுக்கற அந்த நொடிப்பொழுதுதான். அதுக்கப்பறம் அதுவும்
உன்னோடதில்ல” என்பார் என்
தாத்தா. என் பார்வையில் இது முற்றிலும் உண்மை.
இப்படி இருக்கையில், யார்
இவர்களுக்கு இந்த உரிமையை, அதாவது தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையைக்
கொடுத்தது?
“கட்சிக்கு இழைக்கப்பட்ட
அநீதியைப் பொறுக்காமல் தீக்குளித்தான் எங்கள் படை வீரன்” என்றும் “இது ஒரு வீர மரணம்” என்றும் சில நாட்களுக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள்
தீக்குளித்தவர்களைப் பற்றி மேடை போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். எவ்வளவோ
சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, போராடி இந்த அளவுக்கு வளர்த்த பெற்றோர்களை,
குடும்பத்தினரை விட்டுவிட்டு யாரோ ஒருவருக்காக உயிரை மாய்த்துக் கொள்வதுதான்
வீரமா?
இந்த மாதிரி மேடைப்
பேச்சுக்களில் தங்கள் உயிரைத் துறந்தவர்களுக்காக உண்மையிலேயே வருந்துபவர்களைவிட ஆதாயம்
தேடுபவர்கள்தான் அதிகம். வீர முழக்கமிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக்
கிளம்பிவிடுவார்கள். ஆனால், செத்தவர்களின் குடும்பம் என்னாகும்? அவர்களின்
குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு யார் பதில் சொல்வது? அவர்களது எதிர்காலம்
என்னாகும்? இதனால் ஏற்படும் இழப்புகளை அந்தத் தலைவராலோ தலைவியாலோ ஈடுகட்ட
முடியுமா?
இப்படி தீக்குளிப்பவர்களுக்காக
பரிதாபப்பட முடியவில்லை. வருத்தமும் கோபமும் தான் மிஞ்சுகிறது. இப்படிப்பட்டவர்கள்
இந்த பூமிக்கு பாரமாக இருப்பதைவிட போய்ச் சேர்ந்தாலே நல்லது என்று நினைக்கத்
தோன்றுகிறது.
தீக்குளிப்பவர்கள்,
தற்கொலை செய்ய முற்படுபவர்கள், அவர்களைத் தூண்டியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட
வேண்டும். அப்போதுதான் மற்றவர்களாவது விழித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
செய்தி: