Tuesday 19 August 2014

சிறுகதை 020 - திருட்டுப்பயல் (June 2014)

திருட்டுப்பயல்

மணி நடுராத்திரி 1. தன் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு, சத்துவாச்சாரியில் உள்ள தன் வீட்டுக்கு வந்து அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் ஜீவா. நேற்று பெய்த பத்து நிமிட கனமழை, சூட்டைக் கிளப்பிவிட்டதே ஒழிய, அந்த இடத்தின் வெப்பம் துளிகூட குறையவில்லை.

வேலமரங்கள் அதிகம் நிறைந்திருந்ததால்வேலூர்என்ற காரணப்பெயர் பெற்றிருந்தாலும், கடந்த சில வருடங்களாக நிலவிய வரலாற்று சிறப்புமிக்க வெப்பத்தின் காரணமாகவெயிலூர்என்று இன்னொரு காரணப்பெயர் கிடைக்கப்பெற்றதில் அந்த ஊர்க்காரர்களுக்கு எந்த ஒரு நகைச்சுவையும் இல்லை. வெப்பத்தை அனுபவிப்பர்கள் அவர்கள்தானே, பாவம்.

வேலூரில் மழை பெய்வது என்பது உலக அதிசயங்களுள் ஒன்று. அதுவும் கோடைக் காலத்தில் மழை என்பது கடைசியாக டைனோசர் காலத்தில் நிகழ்ந்தது என்று வரலாற்றுச் சுவடுகள் கூறுவதாகத் தகவல்.

வேலூரில் வெயில் காலத்தில் மழை பெய்தால், ஒரு வேளை ஊரின் வெப்பம் தாங்க முடியாமல் சூரியனுக்கே வியர்க்கிறதோ என்று யோசிக்கத் தோன்றும்.

நேற்றும் இப்படித்தான். மழை சில நிமிடங்கள் பெய்துவிட்டு, ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதால் வெப்பம் அதிகமானதுதான் மிச்சம். போதாக்குறைக்கு மின்வெட்டு வேறு.

தன் வீட்டின் படுக்கையறையில் ஜன்னல்கள் இல்லாத காரணத்தால், வீட்டுக்கூடத்துக்கு வந்து, கூடத்தில் இருந்த ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். பரவாயில்லை, ரொம்பப் புழுக்கமாக இல்லை.

பக்கத்து வீட்டு மாடியில் யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டது. தூக்கக் கலக்கத்தில் அதை பொருட்படுத்தாமல் தூங்கினான். சில நிமிடங்களில் தன் வீட்டு வாசற்கதவின் பூட்டு உடைக்கப்படும் சத்தம் அவன் காதில் கேட்டது. தூக்கிவாரிப் போட்டதால் தூக்கத்திலிருந்து விழித்தான் ஜீவா.

தன் கைப்பேசியைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் வீட்டுக்கூடத்தினுள் நுழைந்துவிட்டான் திருடன். அவன் கையில் வழக்கம்போல் ஒரு பளபளக்கும் கத்தி.

ஏய், சத்தம் போட்டே.. அவ்ளோதான்.. விஸ்க் விஸ்க்என்று கர்ஜித்தான் திருடன். ஊருக்குச் சென்றிருக்கும் தன் மனைவியின் குரலில் அவ்வப்போது வெளிப்படும் அதே கொடூரமும் கோபமும் இந்தத் திருடனின் குரலில் இருந்ததை உணர்ந்தான் ஜீவா.

சரி.. சரி.. கத்தலைபயத்தில் பம்மிக்கொண்டே சொன்னான் ஜீவா.
பணம், நகை எல்லாத்தையும் எங்கே வெச்சிருக்கே?” திருடனின் குரலில் கனிவை எதிர்பார்க்க முடியுமா? சீலிங்கே இடிந்து கீழே விழுந்துவிடும் அளவுக்கு இருந்தது அவன் கர்ஜனை.

அதெல்லாம் வீட்டுல வெச்சிக்கறதில்லை..” பயத்தில் ஜீவாவின் உடலும் குரலும் நடுங்குவதை அந்தத் திருடன் கவனிக்கத் தவறவில்லை.

வீட்டுல வெச்சிகறதில்லைன்னா, எங்கே வெச்சிருக்கே? சின்ன வீட்டுலயா?”

ஐயோ இல்லை சார்.. நான் ஒரு ஏகப்பத்தினிவிரதன்அப்பாவியாகச் சொன்னான் ஜீவா.

ஏய்.. என்னது ஏகப்பட்ட பத்மினியா? என்னடா சொல்றே?” தன் முன்னால் நின்றுகொண்டிருப்பவன் பலவீனமானவன் என்பது தெரிந்தவுடன் ஒருவிதத் திமிர் வெளிப்பட்டது திருடனின் குரலில். இதுதானே இந்தக் காலகட்டத்தில் மனித இயல்பு.

ஐயோ.. பத்மினியோட அண்ணனா நீங்க? சார், என்னை மன்னிச்சிடுங்க. நானும் உங்க தங்கச்சியும் காலேஜ் நாள்ல லவ் பண்ணது உண்மைதான். ஆனால், நாலு வருஷத்துக்கு முன்னாடி அவளைப் பார்த்ததுதான் கடைசி. அதுக்கப்பறம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. எனக்கு ஒன்னும் தெரியாது சார்பயத்தில் உண்மைகளை எல்லாம் உளற ஆரம்பித்தான் ஜீவா.

என்னது பத்மினியா? டேய் என்னடா உளறிக்கிட்டு இருக்கே? மவனே, ஒரு போடு போட்டா அவ்வளவுதான். என்னைப் பார்த்தா எப்படி இருக்குது? நெக்கலா உனக்கு?”

ஐய்யய்யோ.. அப்போ நீங்க நிக்கோல் சாராவோட அண்ணனா? மன்னிச்சிடுங்க சார். உங்க தங்கச்சியை நான் காலேஜ் நாள்ல பார்த்ததுதான். பத்மினியைப் பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் நிக்கோலும் லவ் பண்ணிட்டு இருந்தோம். ஆனா அதுக்கப்பறம் எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு வந்துடுச்சு. அதனால நாங்க சுமூகமா, நண்பர்களாக பிரிஞ்சிட்டோம்

.. அப்படியா விஷயம்? அப்பறம் என்னாச்சு?” பொறுமையாக கவனிப்பதுபோல கேட்டான் திருடன்.

அதுக்கப்பறம் தான் நான் பத்மினியை சந்திச்சேன். அவளைப் பார்த்ததுமே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்..” என்று ஜீவா விளக்கிக் கொண்டிருக்கும்போதுஅடச்சீ நிறுத்துஎன்று கத்தினான் திருடன். பொறுமையிழந்திருந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

உடனே கப் சிப் ஆனான் ஜீவா.

உன்னோட பாழாப்போன லவ் ஸ்டோரியை கேட்கவா நான் இங்கே வந்திருக்கேன்

சாரி சார். நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியலை. அதான்..”

மூடுடா வாயை. விட்டா பேசிக்கிட்டே இருப்பே போல. ஒழுங்கா மரியாதையா பணம் நகை எல்லாத்தையும் எங்கே வெச்சிருக்கே சொல்லு. இல்லைன்னா கத்தியை சொருகிடுவேன். ஜாக்கிரதைமிரட்ட ஆரம்பித்தான் திருடன்.

எல்லாம் பேங்குலதான் இருக்கு சார். இங்கே நீங்க எதிர்பார்க்குற எதுவும் இல்லை. என்னை விட்டுடுங்க சார்கை கூப்பி வேண்ட ஆரம்பித்தான் ஜீவா.

எல்லாம் தெரியும். வீட்டுல பீரோ எங்கடா இருக்கு?”

பெட்ரூமுல சார்

வாடா என் கூட. நீயே அந்த பீரோவைத் திற. பூட்டு உடைக்கிற வேலை மிச்சம் எனக்கு

சார், இது உங்களுக்கே ஓவரா தெரியலையா. என் வீட்டு பீரோவை என்னையே திறக்கச் சொல்றீங்களே?” அப்பாவியாகக் கேட்டான்.

என்ன அங்க முனுமுனுப்பு? கத்தியோட கூர்மையா பார்க்கறியா?” என்று தன் கையில் இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினான் திருடன்.

தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு மெதுவாக படுக்கையறைக்குச் சென்றான் ஜீவா. அவனைப் பின்தொடர்ந்து வந்தான் திருடன்.

லைட்டைப் போடுடா. இருட்டா இருக்குல்லஎன்று உத்தரவிட்டான் திருடன். அவன் சொன்னதுபோலவே ட்யூப் லைட்டின் ஸ்விட்சை அழுத்தினான் ஜீவா. ஆனால் ட்யூப் லைட் எரியவில்லை.

சார், கரண்ட் இல்லை. டார்ச் தான் இருக்கு. எடுக்கட்டுமா?” கிட்டத்தட்ட அடிமைபோல் ஆகியிருந்தான் ஜீவா.

ஹும், சரி. டார்ச் லைட்டை எடுத்துக்கோ. பீரோவைத் திற

அவன் சொன்னதுபோலவே டார்ச் லைட்டை எடுத்து அதை இயக்கி, தலையணைக்கு அடியில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறக்க முயற்சித்தான் ஜீவா.

என்னடா இவ்ளோ சின்ன பீரோவா இருக்கு? நாலரை அடிதான் உயரம் இருக்கும்போல?”

ஆமாம் சார். உள்ளே வெக்க எதுவும் இல்லை. அதனால சின்ன பீரோவே போதும்னு பொண்டாட்டி சொன்னாங்க. அதனாலதான் இதை வாங்கினோம்கிளிப்பிள்ளையைப் போல் அழகாகப் பதில் சொல்லிவிட்டு தொடர்ந்து பீரோவைத் திறந்து கொண்டிருந்தான்.

என்னடா இவ்ளோ நேரம் எடுத்துக்கறே?” திருடனின் பொறுமை போய்க் கொண்டிருந்தது.

இதோ இப்போ திறந்திடுவேன் சார்

ஆச்சா? எவ்ளோ நேரம்? கொஞ்சம் கூட சுறுசுறுப்பில்லை உனக்கு

பீரோவைத் திறந்தான் ஜீவா. “ஆச்சு சார். வாங்க, வந்து பாருங்கஎன்று திருடனை பவ்யமாக அழைத்தான்.

ஆங், தள்ளிக்கோ. கத்தி மேல பட்டுறப்போகுதுஎன்று ஜீவாவை நகரச் சொல்லிவிட்டு, பீரோவின் முன் வந்து நின்றான் திருடன்.

பீரோவின் கதவைத் திறந்தான். அந்த அதிர்வில் பீரோவின் மேல் வைக்கப்பட்டிருந்த சில மாத்திரை அட்டைகள், ஆயின்மெண்ட்கள் கீழே விழுந்தன.

அந்த மாத்திரை அட்டைகளையும், ஆயின்மெண்ட்களையும் எங்கேயோ பார்த்திருப்பதுபோல் இருந்ததால், கீழே குனிந்து அவற்றை எடுத்தான் திருடன். மாத்திரைகளின் பெயர்களையும், ஆயின்மெண்ட்களின் பெயர்களையும் படித்ததும் அவன் முகத்தில் இருந்த அந்த கோபமும், திமிரும் மறைந்து, கனிவும், அக்கறையும் தோன்றியது.

ஜீவாவை நோக்கி திரும்பி நின்று, “இந்த ஆயின்மெண்ட், மாத்திரை எல்லாம் நீ போட்டுக்கறதா?” என்று கேட்டான்.

ஆமாம் சார்

திருடனின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பிக்கும் முன் அதைத் துடைத்துக் கொண்டான்.

என்ன ஆயின்மெண்ட் போட்டு என்ன பிரயோஜனம்? ஒன்னும் குணமாகுற மாதிரி இல்லையேஎன்று வருத்தப்பட்டான் ஜீவா.

டேய், இதெல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கும் மூலம் இருந்துச்சு. போடாத மாத்திரையில்லை, ஆயின்மெண்ட் இல்லை. ரொம்ப வருஷமா சரியாகலை. அப்பறமா ஒரு டாக்டரைப் போய் பார்த்தேன். அவர்தான் ஆப்பரேஷன் பண்ணி, என்னை குணப்படுத்தினார்

உங்களுக்கு குணமாகிடுச்சு சார். அதனால நீங்க நிம்மதியா இருக்கீங்க. நாலு வீட்டுக்குப் போறீங்க, வர்றீங்க. எனக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா? உக்கார முடியலை, படுத்துக்க முடியலை. எந்த ஊருக்கும் போக முடியலைஎன்று ஜீவா சொல்லும்போது அவன் கண்களில் நீர் தேங்கியிருந்தது. அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி, கண்ணீராக வழியத் தொடங்கியது.

ஜீவா அழுவதைப் பார்க்கும்போது, தன்னையே பார்ப்பது போல் இருந்தது திருடனுக்கு. டேய், டேய்.. அழாதே. ஆம்பிளைப் புள்ளைங்க அழக்கூடாதுஎன்று ஜீவாவின் கண்ணீரைத் துடைத்தான் திருடன்.

நான் ஒரு டாக்டரோட நம்பர் கொடுக்கறேன். நீ நேரா அவரைப் போய் பாரு. அவர் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாறுஎன்று ஜீவாவை சமாதானப்படுத்தி, அவனுக்கு ஆறுதல் சொன்னான் திருடன்.

ஒரு பாலைவனத்தில், தாகத்தினால் வரண்டு வதங்கி போயிருந்த ஒருவனுக்கு பாட்டில் பாட்டிலாகக் குளிர்ந்த நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? திருடனின் இந்த பதிலைக் கேட்டு அப்படி உணர்ந்தான் ஜீவா. முகம் பளிச்சென்று ஒளிர்ந்தது.

சுவற்றில் அந்த மருத்துவரின் கைப்பேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து வெறுங்கையுடன் கிளம்பினான் திருடன். அந்த நொடி அங்கு மின்சாரம் திரும்ப வந்தது, ட்யூப் லைட் எரிந்தது,

வெளிச்சமானது அந்த அறை மட்டுமல்ல, ஜீவாவின் வாழ்க்கையும்தான்.

தனது வாழ்வில் ஒளியேற்றிய அந்தத் திருடனுக்கு மனதார நன்றி சொன்னான் ஜீவா.

Sunday 3 August 2014

கல்லூரி கலாட்டாக்கள் - பகுதி 2

கல்லூரி கலாட்டாக்கள்

கலாட்டா 5:

பொறியியல் மூன்றாம் ஆண்டு என நினைக்கிறேன். அலைபேசி அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்திருந்தது.

ஒரு தனியார் நிறுவன அலைபேசியை 500 ரூபாய்க்கு வாங்கலாம் என்று வந்திருந்த காலம் அது. அன்றைய நாட்களில் 500 ரூபாய்க்கு அலைபேசி கிடைக்கச் செய்த அந்த நிறுவனமும், அதை அவர்கள் விளம்பரப்படுத்தியதும் இன்றைய காலகட்டத்தில் நாம் காண்கிற அலைபேசிகளின் விற்பனைக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது,

ஆனால், அந்த குறிப்பிட்ட அலைபேசியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றால் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என நினைத்து பலர் அந்த அலைபேசியை வீட்டிலோ, விடுதியிலோ வைத்துவிட்டு வெறுங்கையோடு வகுப்பறைக்கு வந்ததுண்டு. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் கடன் வாங்கியோ, வீட்டில் பொய் சொல்லியோ கொஞ்சம் விலையுயர்ந்த அலைபேசியை வாங்கி, அதை எடுத்துக் கொண்டு கம்பீரமாக வகுப்பறைக்கு வருவார்கள்.

பல மாணவ, மாணவிகள் அலைபேசியை இன்றியமையாத ஒரு பொருளாக எண்ணத் தொடங்கியிருந்தனர். அலைபேசியின் விலை எத்தனை அதிகமோ, அதை வைத்திருப்பவரது பொருளாதார நிலையும் அத்தனை உயர்ந்திருந்ததாக காட்சி இருந்தது.

நாளடைவில், அனைவரது கையிலும் நோட்டுப் புத்தகங்கள் இருந்ததோ இல்லையோ, அலைபேசி ஒன்றாவது இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த கலாட்டா அரங்கேறியது.

எங்கள் வகுப்பறையில், ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கென்றே சில நண்பர்களின் பெயர்களை உரக்கச் சொன்ன காலம் அது. அதாவது, யாராவது ஒருவர் பாடத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை செமினார் எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சொன்னால், உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த நண்பர்களும் சிலரின் பெயர்களைச் சொல்ல ஆரம்பிக்க, உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் அந்தப் பெயர்களை வழிமொழிய ஆரம்பிக்க, இறுதியில் அந்தப் பெயர்களில் ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும். இதுதான் வழக்கம்.

இப்படி எங்களால் மாட்டிக் கொண்டவர்கள், இல்லையில்லை, நாங்கள் மாட்டிவிட்டவர்கள் அல்லது போட்டுக் கொடுத்தவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவன் செந்தில். எங்கள் நெருங்கிய நண்பர்களுள் ஒருவன்.

ஒரு நாள் காலை வகுப்பறையில் நுழைந்தபோது அவனது அலைபேசி ஒலிக்க, அந்த அழைப்பை ஏற்று பேசிக்கொண்டே உள்ளே வந்தான் செந்தில். கடைசி வரிசையில் இருந்த நாங்களும், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த அசோக் என்ற நண்பனும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அசோக்கிற்கு அந்த ஒரு அருமையான யோசனை தோன்றியது.

வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிட்டு, உடனே அனைவரும் “செந்தில்” என்று கத்த வேண்டும் என்று யோசனை சொன்னான் அசோக். சரி, ஒரு வழியில் எங்களுக்கும் பொழுது போகும் என்ற நினைப்பில் அந்த யோசனையைக் கடைசி வரிசையில் இருந்த நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.

ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் மிகவும் சின்சியராக பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அசோக் எங்கள் பக்கம் திரும்பி இப்போது தன் அலைபேசியின் ரிங் டோனைக் கத்தவிடப் போவதாகவும், அடுத்த நொடி “செந்தில்” என்று அனைவரும் கத்த வேண்டும் என்றும் சொன்னான். நாங்கள் சரியென்றோம்.

சொன்னது போலவே அசோக் தன் அலைபேசியின் ரிங் டோனை ஒலிக்க வைத்து எங்கள் பக்கம் திரும்பி, “செந்தில்” என்று கத்த ஆரம்பித்தான். ஆனால், அதற்குள் நாங்கள் அனைவரும் “அசோக்” என்று கத்த ஆரம்பித்திருந்தோம். உடனே வகுப்பிலிருந்த மற்றவர்களும் “அசோக்” என்று கத்த ஆரம்பிக்க, அசோக் ஒருவன் மட்டுமே “செந்தில்” என்று கத்திக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை, பாவம். கடைசியில், தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொண்டான்.


“செந்தில்” என்பதற்குப் பதிலாக “அசோக்” என்று கத்தவேண்டும் என்று கடைசி வரிசையில் இருந்த நாங்கள் பேசி வைத்துக் கொள்ளவில்லை. தானாகவே இப்படிக் கத்தியது எங்களுக்குள் இருந்த புரிதலைக் காட்டியது என்றே நினைக்கிறேன்.