மறக்க முடியாத
முகங்கள் – 4:
சென்ற மாதம், அலுவல்
நிமித்தமாக ஜெர்மனி செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் அங்கு இருக்க வேண்டும்.
காரணம் ‘டீம் பட்ஜெட் நிலைமை’.
ஐ.டி துறையில்
இருப்பவர்களுக்கு இந்த மூன்று வார்த்தைகள் ‘டீம் பட்ஜெட் நிலைமை’ பரிச்சயமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மற்றவர்களுக்கு இதை எப்படி விளக்குவது? ஆங், யோசனை வந்துவிட்டது.
அதாவது, ‘டீம்
பட்ஜெட் நிலைமை’ என்பது ஒரே ஒரு தோசையை மூன்று, நான்கு பேருக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான
ஒரு சாக்கு.
யாருக்கும் வயிறு
நிரம்பாது. அதே நேரத்தில், நம் மேனேஜர் ‘நான் உனக்காவது கால் தோசை கொடுத்தேன்.
மற்றவர்களுக்கு அதுகூட இல்லை’ என்ற சாக்கு சொல்லிச் சொல்லியே தப்பிப்பதற்கு உதவும். இதுதான் ‘டீம் பட்ஜெட்
நிலைமை’.
வெளிநாட்டுப் பயணம்
என்பதால் விமானம் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்பாகவே விமான நிலையத்தில்
இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது. அதாவது அதிகாலை 4
மணி விமானத்திற்கு 1 மணிக்கே அங்கு இருக்க வேண்டும். அதற்கு வீட்டிலிருந்து 12
மணிக்கே கிளம்ப வேண்டும். அவ்வளவு தூரம்.
என்னை பிக்-அப் செய்ய
டேக்ஸி டிரைவர் 11:30 மணிக்கே வீட்டுக்கு வந்துவிட்டார். இன்னும் அரை மணி
நேரத்தில் நான் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு எல்லா பொருட்களையும் சரிபார்த்து
கொண்டிருந்தேன்.
12 மணிக்கு வீட்டை
பூட்டிவிட்டு வெளியே சென்றேன். டாடா இண்டிகா நின்று கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும்
சற்று தூரத்தில் இருந்து வந்தார் ஓட்டுனர். நெற்றியில் விபூதிப் பட்டை. அவருக்கு
அது மிகப் பொருத்தமாக இருந்தது.
லக்கேஜை வண்டியினுள்
வைத்துவிட்டு, உள்ளே உட்கார்ந்தேன். வண்டி படுசுத்தமாக இருந்தது. சாமி பொம்மை, ஊதுவத்தி
வாசனை, சில பழங்கள் என அந்த இடமே மணந்தது.
வண்டியை கிளப்பினார்.
சில நிமிடங்களில் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அழகான தமிழில் பேசினார். “என்
சொந்த ஊர் மதுரை சார்” என்றார். ஆச்சரியப்படவில்லை.
“அப்படீங்களா? நான்
வேலூர் ஆள் சார்” என்றேன். அதற்கு அவர், “நெனச்சேன் சார். உங்க பேச்சு
கொஞ்சம் முரட்டுத்தனமும், நக்கலும் கலந்ததா இருக்கும்போதே நீங்க வட ஆற்காடு மாவட்டத்துல
இருந்து வர்றீங்கன்னு நெனச்சேன்” என்றார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என நினைத்துக்
கொண்டேன். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம்.
அவர் சொன்ன தகவல்கள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. சொந்த
ஊரிலிருந்து 7 வயதிலேயே தன் தங்கையுடன் இங்கு வந்துவிட்டாராம். சொத்துப் பிரச்சனை
காரணமாக அவருடைய பெற்றோரை உறவினர்களே ஆளை வைத்து கொன்றுவிட்டார்களாம்.
அவர்களிடமிருந்து தப்பித்து இங்கு வந்துவிட்டதாகச் சொன்னார்.
பெங்களூருக்கு வந்து சில நாட்களிலேயே இவர்களை ஒருவர் தத்தெடுத்துவிட்டார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு மகள். இப்போது இவர்களையும் சேர்த்து மொத்தம் மூன்று
குழந்தைகள்.
இவருக்கு நடந்தது காதல் திருமணம். இப்போது இவருக்கு 50 வயதாகிறது. இரண்டு
மகள்கள், ஒரு மகன். மகள்கள் இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்த்து
வருகின்றனர். திருமணமாகி செட்டிலாகிவிட்டனர் மகன் பொறியியல் படிப்பு படித்து
வருகிறான்.
நன்றாக செட்டில் ஆகிவிட்டீர்களே, பிறகேன் டேக்ஸி ஓட்டி உடம்பை வருத்திக்
கொள்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன வியப்பில்
ஆழ்த்தியது.
“தினமும் காலைல 6 மணிக்கெல்லாம் எழுந்து முதல் வேலையா குளிச்சுடுவேன். அப்பறம்
சாமி ரூம்ல உக்காந்து கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் பூஜை பண்ணுவேன்”
“அப்பறம் சாப்பிட்டுட்டு
வேலைன்னு வெளியே கிளம்பிடுவேன். வேலை செய்யாம என்னால சாப்பிட முடியாது, தூங்க
முடியாது. நிம்மதி போயிடும் சார். ஞாயித்துக்கிழமை மட்டும் ரெஸ்ட். மத்த நாள்ல
வேலை செஞ்சே ஆகணும்”
இதையெல்லாம்
கேட்டபிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் டாபிக்கை மாற்றினேன். “உங்க தங்கை எங்கே இருக்காங்க
சார்? செட்டில் ஆகிட்டாங்களா?” என்று கேட்டேன்.
“எனக்கு ரெண்டு
தங்கைன்னு சொன்னேனே, ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. இங்க எங்க வீட்டுக்குப்
பக்கத்துலதான் இருக்காங்க”
“அடிக்கடி வீட்டுக்கு
வருவாங்க. வீட்டுக்கு வந்து, ஏதாவது பிடிச்சுப்போச்சுன்னா.. புடவைன்னு
வெச்சுக்கங்களேன்.. அவங்க பாட்டுக்கு பீரோவை திறந்து எடுத்துட்டு போயிட்டே
இருப்பாங்க. என் மனைவியும் ஒரு வார்த்தை பேசாம, அவங்க கேட்டதை எடுத்து
கொடுத்துடுவாங்க. அவங்க உடுத்தியிருக்கற புடவையா இருந்தாலும் அதேதான்” என்றார்.
ஆச்சரியத்தின் மேல்
ஆச்சரியம். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனைவியா? என்று வியந்தேன் நான். அவர்
தொடர்ந்தார்.
“இப்படிப்பட்ட ஒரு
மனைவியை நான்தானே சார் ஒழுங்கா பாத்துக்கணும். இன்னும் எத்தனை வருஷம் என் உடம்பு
ஒத்துழைக்குதோ, அத்தனை வருஷம் என் மனைவிக்காக உழைப்பேன் சார்” என்று அவர் சொல்லும்போது விமான நிலையம் வந்து
சேர்ந்தோம்.
இறங்கி லக்கேஜ்
எடுப்பதற்கு வெளியே வந்தபோதுதான் அவர் கண்களைப் பார்த்தேன். கலங்கியிருந்தன. அதைப்
பார்த்தவுடன் என் கண்களும் கலங்க ஆரம்பித்தன.
அவரிடம் விடைபெற்று,
நான் விமான நிலையத்தினுள் நுழைந்தேன். சிந்தனையெல்லாம் அவரைப் பற்றிதான்.
அவரை நான் எங்கு
பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்வேன் என நினைக்கிறேன். அப்படியொரு மறக்க முடியாத
முகம் அது.
No comments:
Post a Comment