Monday 27 January 2014

மறக்க முடியாத முகங்கள் - 3

மறக்க முடியாத முகங்கள் - 3:

வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போகும் வழியில் இரண்டு டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. முதல் டிராஃபிக் சிக்னலைக் கடப்பது அவ்வளவு பெரிய சிரமமாக இருக்காது என்றாலும் கூட, அந்த சிக்னலில் மாட்டிக்கொண்டால் கொஞ்சம் கடுப்பாகிவிடும். ஏனென்றால், அந்த இரண்டாவது டிராஃபிக் சிக்னலில் தினமும் இரண்டு முறையாவது நிற்கவேண்டியிருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, இந்த முதலாவது சிக்னலில் மாட்டிக்கொண்டேன். அப்போது சில திருநங்கைகள் அங்கு வந்து ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, பல நேரங்களில் அவர்களது இந்தச் செயலை நியாயப்படுத்தியும் இருக்கிறேன். ஏனென்றால், கட்டட வேலை, வீட்டு வேலை போன்ற வேலைகளுக்குக்கூட திருநங்கைகளை வைப்பதில்லை. என்னதான் செய்வார்கள் அவர்கள்?

அவர்கள் அடுத்து என் வண்டியின் அருகே வந்து, என்னிடமும் பணம் கேட்டார்கள். நானும் என் பர்ஸைத் திறந்து, பத்து ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். அவர் அந்த ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றார். திகைத்துப்போனேன்.

"என்ன வேணும் உங்களுக்கு?" இது நான்.
"பௌர்ணமி வருது. பூஜை பண்றோம்" இது அவர்.
"சரி, அதுக்கு நான் என்ன பண்ணணும்?" இது நான்.
"ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா, நல்லாருக்கும்" இது அவர்.
"என்னாது ஐநூறு ரூபாயா?" அதிர்ச்சியில் நான்.
"ஆமா, சரி அட்லீஸ்ட் ஒரு நானூறு ரூபாயாவது கொடுங்க. உங்க பேரைச் சொல்லி பூஜை பண்றோம்" விடாப்பிடியாக அவர்.
"என்னங்க இது. விட்டா கேட்டுட்டே இருப்பீங்க போல" இது நான்.

இப்படி கேட்கும்போது சிக்னலில் பச்சை விழ, பின்னால் நின்று கொண்டிருந்த வண்டிகள் ஹாரன் அடிக்க, அவசரமாக அங்கிருந்து கிளம்பினேன். வழியில் இந்த உரையாடலை மனதுக்குள் ரீப்ளே செய்துகொண்டே இருந்தேன்.

எத்தனையோ முறை இந்த மாதிரி பணம் கொடுத்திருக்கிறேன். ஆனால், இந்த முறைதான் இப்படி நடந்துவிட்டது. யார் இவர்? இவர் முகத்தை மறக்கக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, கண்ணாடியில் பார்த்தேன். ஒரு அப்பாவியான முகம் தோன்றியது கண்ணாடியில். அது ஏன் இவருக்கு என்னைப்பார்த்து இப்படி கேட்கத் தோன்றியது? ஒரு படத்தில் கவுண்டமணி அவர்கள் செந்திலைப் பார்த்து, "அது ஏன் என்னைப் பார்த்து இந்த மாதிரி கேட்கறே?" என்று கேட்பார். அதே கேள்வி, என்னைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன். அன்று மட்டும் இப்படி நடந்தது. அடுத்த சில நாட்கள் எப்பவும் போலவே இருந்தன.

மீண்டும் ஒரு நாள், அன்று நான் பார்த்த அதே நபர் சிக்னலில் நின்றுகொண்டிருந்தார். சுதாரித்துக்கொண்டேன். சிக்னலில் ஃப்ரீ லெஃப்ட் என்பதால், வண்டி நெரிசலில் சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டி, இடது பக்கம் திரும்பி ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். எதையோ சாதித்துவிட்டது போல ஒரு உணர்வு.

இப்படி என்னை தலைதெரிக்க ஓடவைத்தவரின் முகமும், முதல் முறை அவரிடம் மாட்டிக்கொண்டு, அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கண்ணாடியில் பார்த்தபோது இருந்த என் முகமும் மறக்க முடியாத முகங்களே!

No comments:

Post a Comment