ஒரு பக்கக் கதைகள்:
1.
உயிரைக் காணவில்லை
வீடு முழுக்கத் தேடியாகிவிட்டது. ரவியின்
உயிரினும் மேலான அவள், எங்கே போயிருப்பாள், தெரியவில்லை. அவள் இல்லாமல் இவன் வெளியே சென்றதில்லை.
ஆனால் இன்று அவளைக் காணவில்லை. பதறியது மனம்.
சமையலறையில் முதலில் தேடினான். அங்கு
காலையில் சமைத்த சாம்பாரின் மணம் இருந்ததே தவிர, அவன் மனம் இல்லை.
பூஜையறையில் தேடினான். அப்போது கடவுள் அங்கு இருந்தாரே தவிர பக்தை
இல்லை.
அவளுடன் செலவழித்த.. இல்லையில்லை.. பகிர்ந்த
அந்த சமயங்கள் எத்தனை அழகு.. எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை
நினைத்துக் கொண்டான். தேடலைத் தொடர்ந்தான்.
படுக்கையறைக்குச் சென்று பார்த்தான். அங்கும்
இல்லை.
கட்டிலுக்குக் கீழே பார்த்தான். அங்கு
கிடத்தப் பட்டிருந்த அவளைப் பார்த்து பயந்து, துடிதுடித்தான்.
குனிந்து எடுத்து, அவளைத் தன் கையில் ஏந்தினான்.
அப்பாடா என்று சொல்வதா? இல்லை, ஐயோ என்று சொல்வதா? தெரியவில்லை, நிம்மதியும், சோகமும், கோபமும்
பெருக்கெடுத்து ஓடியது.
அவளைக் கையில் வைத்துக் கொண்டே, அவசர
அவசரமாக முதலுதவி செய்தான். உயிர் முழுவதுமாகப் போயிருக்கவில்லை.
நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
“ஏய் சாந்தி, ஏன் என்னோட ஆன்ட்ராய்ட் போனை
கீழே போட்டிருக்கே? சார்ஜ் சுத்தமா இல்ல” என்று கோபமாகக் கத்திக் கொண்டே தன் உயிரினும் மேலான கைப்பேசியைச் சார்ஜில்
போட்டு, மனைவியுடன் சண்டை போட ஆயத்தமானான்.
2.
நேரம்
“என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும் சொல்லு?” என்று
தன் காதலன் விமலிடம் கேட்டாள் ராதா. அதற்கு விமல், “ரொம்பப் பிடிக்கும்டி. என்ன
திடீர்னு கேக்கற?” என்றான்.
“இந்த மாதிரி மொட்டையா பேசி மழுப்பாதடா. எவ்ளோ
பிடிக்கும்னு ஒழுங்கா சொல்லு”
“ஏன் இப்படி விடாம இதையே கேட்டுக்கிட்டு
இருக்க?” என்றான்.
“இல்ல, இன்னிக்கு என் ஃப்ரெண்ட் பிரியாவ
பாத்தேன். அவளுக்கு அவளோட பாய்ஃப்ரெண்ட் ராகேஷ் ஒரு வைர மோதிரம் வாங்கி
கொடுத்திருக்கான். நீ இந்த மாதிரி எதுவுமே வாங்கி தரலை” ராதாவின் முகத்தில் ஒரு சின்ன, செல்ல கோபம்.
“அந்த ராகேஷ் என் ஃப்ரெண்ட் தான். அவன் அடிக்கடி
பிரியாவ பாக்க வர்றானா? அது தெரியுமா உனக்கு?”
“இல்ல, வேலை அதிகமாம், அதனால ரெண்டு, மூணு
வாரத்துக்கு ஒரு தடவை தான் பாக்க வர்றானாம்”
“தெரியும் எனக்கு. நாங்க ரெண்டு பேரும் ஒரே
கம்பெனில தான் வேலை செய்யறோம். எனக்கும் அவ்ளோ வேலையெல்லாம் இருக்கு. நான் டெய்லி
உன்னை பாக்காம வீட்டுக்கு போறதில்ல. அவன் மோதிரம் வாங்கறதுக்கு காசு செலவுபண்ணான்.
ஆனா, காச எப்பொ வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம். நான் உனக்காக என்னோட நேரத்த
செலவுபண்றேன். அது போச்சுன்னா திரும்ப கிடைக்குமா சொல்லு?” என்று கேட்டான்.
இதை சற்றும் எதிர்பாராத ராதா விமல் சொன்ன
வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்து, “தெரியும்டா, சும்மா தான் கேட்டேன்” என்று
புன்னகைத்தாள்.
3.
இல்லை
கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியே வந்துக்கொண்டிருந்தனர் நண்பர்களான ரவியும்,
மனோகரும். “நல்ல தரிசனம்டா இன்னிக்கு. இப்படியே ஒவ்வொரு தடவையும் அமைஞ்சுட்டா
நல்லாருக்கும்” என்று ரவியிடம்
சொன்னான் மனோகர்.
“ஆமாம்டா. சரி
அது கிடக்கட்டும், நீ சீக்கிரம் வா. கோவில் வாசல்ல இருக்கற அந்த வயசான
பிச்சைக்காரங்க நம்மள பாத்தா, அய்யா, சாமி, பிச்சை போடுங்கன்னு தொல்லை பண்ணுவாங்க” என்றான் ரவி.
“அவங்க ஏன்
அப்படி கேக்கறாங்கன்னு தெரியுமா?”
“எதுக்கோ
கேக்கறாங்க. அநேகமா அவங்ககிட்ட
எதுவும் இல்லன்னு அப்படி கேக்கறாங்கன்னு நினைக்கிறேன்” என்றான் ரவி.
அதற்கு மனோகர்,
“இல்லைனு அவங்க கேக்கும்போது, நீயும் இல்லைனு சொன்னா, உனக்கும் அவங்களுக்கும் என்ன
வித்தியாசம்?” என்று கேட்டான் மனோகர். சுளீரென்று உரைத்தது ரவிக்கு.
கோவிலுக்கு வெளியே வந்ததும் தங்களால் முடிந்த பணத்தை பிச்சைக்காரர்கள்
தட்டுகளில் போட்டு, வீட்டை நோக்கிச் சென்றனர் இருவரும்.
4.
அவர்களும் குழந்தைகளே
ஏதோ கோபத்துடன் வீட்டுக்கூடத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷிடம்
அவன் மனைவி மீனா, “என்னங்க? உங்க அப்பாக்கிட்ட ஏதோ சொல்லி
சத்தம் போட்டுட்டு வர்றீங்க? என்னாச்சு?” என்று கேட்டாள்.
அதற்கு ராஜேஷ், “ஒரே விஷயத்தை பத்து, பதினொறு தடவை சொல்ல வேண்டியிருக்கு. எத்தனை தடவை சொல்றது
ஒரு செவிட்டு மிஷின் வாங்கித்தர்றேன், போட்டுக்கோன்னு.
கேட்கவே மாட்டேங்கறாங்க” என்றான் எரிச்சலுடன்.
“அப்படியா? சரி, காலைலேர்ந்து
நம்ம பையன் சித்தார்த்கிட்ட ஏதோ போராடிக்கிட்டு இருக்கீங்களே, என்ன விஷயம்?” அமைதியாகக் கேட்டாள் மீனா.
“அதுவா, நானும் அவன் வாயிலேர்ந்து அப்பான்ற
வார்த்தையை கேக்கணும்னு முயற்சி பண்ணிட்டிருக்கேன். சொல்லவே மாட்டேங்கிறான்”
ராஜேஷின் முகத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.
“ஒன்றரை வயசு பையன் உடனே சொல்லிடுவானா? நாமதான்
பொறுமையா இருக்கணும். உங்க அப்பாவும் நீங்க குழந்தையா இருந்தப்போ
உங்ககிட்ட இப்படித்தானே பொறுமையா பேசியிருப்பார்? அவர்கிட்டே
போய் இப்படி சத்தம் போடணுமா?” கணிவுடன் கேட்டாள் மீனா.
உரைத்தது ராஜேஷுக்கு.
மேலும் தொடர்ந்தாள் “குழந்தைங்க மாதிரிதான் வயசான
பெரியவங்களுக்கும் எல்லாமே உடனே புரிஞ்சிடாது, சரியா நடக்க முடியாது, பாக்க
முடியாது, கேட்க முடியாது. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு காது சரியா கேட்க
மாட்டேங்குது, பாவம். இது உங்களுக்கும் தெரியும். இந்த நேரத்துல நீங்க அவரோட நிலைமையை
புரிஞ்சு நடந்துக்க வேணாமா? நம்மள விட்டா அவங்களுக்கு வேற யார் இருக்காங்க?”
தான் செய்த தவறை உணர்ந்தான் ராஜேஷ். முதியவர்கள்
உடம்பாலும், மனதாலும் குழந்தைகள்தானே!
5.
ஒரு வேளை நாய்க்கு தெரியுமோ?
ஜெயமுருகன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு பேய் படத்தை, தன் தோழி விமலாவுடன் பார்த்துவிட்டு, வெளியே வந்து தன் இருசக்கர
வாகனத்தில் கிளம்பினாள் கீதா. மணி இரவு 9 ஆகியிருந்தது.
“பயங்கரமா இருந்துச்சுடீ இந்தப் படம். நெறைய இடத்துல பயந்து
கண்ணை மூடிக்கிட்டேன்” என்றாள் கீதா.
பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த விமலா, “இதுக்குப்போய்
பயந்துட்டியா? இன்னும் எவ்வளவோ இருக்கு” என்றாள்.
“படத்துல ஒரு சீன்ல, பேய் உக்காந்துட்டு இருக்கும் ஒரு
வண்டியை பார்த்து நாய் குரைக்கும் பாத்தியா? ஒரு வேளை அதுங்களுக்கு மட்டும் பேய்,
பிசாசு எல்லாம் கண்ணுக்கு தெரியுமோ?”
“அது எனக்கு எப்படி தெரியும்?” என்று விமலா சொல்ல, இவர்கள்
சென்றிருந்த பாதையில் இருந்த மின் விளக்குகள் அணைந்தன.
அங்கு இருந்த நாய்கள் ஒன்றுகூடி குரைக்க ஆரம்பிக்க,
பயத்தில் கீதா வண்டியை நிறுத்தாமல் வேகமாக வண்டியை ஓட்டினாள்,
வீட்டை வந்தடையும்போதுதான் கவனித்தாள் தன் பின்னிருக்கையில்
இருந்த விமலா இப்போது அங்கு இல்லையென்பதை.
No comments:
Post a Comment