Saturday 4 April 2015

சிறுகதை 023 - நடப்பதெல்லாம் நன்மைக்கே (September 2014)

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சிவாவின் வாழ்க்கையில் மட்டும் எத்தனை சவால்கள், எத்தனை இடையூறுகள், எத்தனை ஏமாற்றங்கள்?

“அதிர்ஷ்டக்கட்டை”என்ற ஒரு சொல்லை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதே போல் “துரதிர்ஷ்டக்கட்டை”என்ற ஒரு சொல்லையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சிவா ஒரு ஆகச்சிறந்த துரதிர்ஷ்டக்கட்டை.
வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் உடைந்து நொறுங்கி போயிருப்பார்கள். ஆனால், சிவா மட்டும் தனி ரகம். தன் உடல் மற்றவர்களைவிட கொஞ்சம் தடியான சதையினாலும், தன் இதயம் கொஞ்சம் உறுதியான பொருளாலும் செய்யப்பட்டிருக்குமோ என்னவோ என்று சிவாவே வியந்ததுண்டு.

பெங்களூரில் இந்திரா நகரில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறான் சிவா. ஏகப்பட்ட மரங்களை வெட்டியெடுத்து, கட்டிடங்களைக் கட்டிக் கட்டி, “கார்டன் சிட்டி” என அழைக்கப்பட்டு வந்த பெங்களூர் இப்போது “கான்கிரீட் காடாக” வேகமாக மாறிவரும் நிலையில், இந்திரா நகர் போன்ற சில பகுதிகளில்தான் இன்னமும் கொஞ்சமாவது மரங்களும், பூங்காக்களும் எஞ்சியுள்ளன. அப்படி ஒரு பூங்காவுக்குப் பக்கத்தில்தான் இவர்களது வீடு உள்ளது.

தினமும் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, இந்த பூங்காவில் ஜாக்கிங் போவது சிவாவின் வழக்கம். இவனைப் போலவே ஏராளமானோர் பூங்காவில் ஜாக்கிங் போவார்கள். பனி படர்ந்திருக்கும் காலை வேளையில் இந்தப் பூங்காவில் பலர் வெள்ளை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட் உடுத்திக்கொண்டு ஜாக்கிங் போவதைப் பார்த்தால், ஆவிகள் காற்றில் மெதுவாக மிதந்து போவது போலவே இருக்கும்.

இவர்களுக்கு மத்தியில் சிவா கிளிப்பச்சை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட் உடுத்தி, காதில் ஹெட் ஃபோன் மாட்டிக் கொண்டு, வாய் ஏதோ முணுமுணுக்க, சற்றே வேகமாக ஜாக்கிங் போவான். பார்ப்பதற்கு மனித உயர கிளி ஒடுவது போலவே இருக்கும்.

ஏனோ தெரியவில்லை, இன்று சிவாவின் முகத்தில் கோபமும், வருத்தமும் கலந்து தென்பட்டது.

இடது கண்ணில் ஆரம்பித்து, அப்படியே மேலே சென்று நெற்றியைத் தொட்டு, பின் அங்கிருந்து வலது கண்ணிற்கு இறங்கி, அங்கிருந்து மூக்கின் வழியாக இறங்கி, வாய் வரை கோடு போட்டுப் பார்த்தால், அவன் முகத்தில் ஒரு கேள்விக்குறி ஒளிந்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

சிவாவின் வாய் எதையோ விடாமல் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அநேகமாக யாரையாவது திட்டிக் கொண்டிருக்கக்கூடும். வாருங்கள், என்ன முணுமுணுக்கிறான் என்று பார்க்கலாம்.

“எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி நடக்குதோ? வேற ஆளே கிடைக்கலையா? எனக்குத்தான் உலகத்துல இருக்கற கஷ்டம் எல்லாம் ஒன்னா சேர்ந்து வரணுமா?”அலுத்தவாறே சொல்லிக் கொண்டிருந்தான் சிவா. எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வான், பாவம்.

யாரோ ஒருவரின் பதிலுக்குக் காத்திருப்பது போல சில நொடிகள் மௌனம்.

பின் தொடர்ந்து புலம்பினான்.

“தினம் சாமி கும்பிட்டுட்டுதான் ஆஃபீஸுக்குப் போறேன். சின்சியரா வேலை செய்யறேன். ஆனா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது? ப்ரமோஷன் கிடைக்கலைன்னாலும் பரவாயில்ல. நான் செஞ்ச நல்ல விஷயத்தை இன்னொருத்தன் செஞ்சதா நெனக்கிறாரு மேனேஜர். இந்த மாதிரி ஒரு மேனேஜரையும் மேய்ச்சுட்டு, நான் பாட்டுக்கு ஒழுங்கா சின்சியரா வேலை பாக்கறேன். ஆனாலும் ஒரு பலனும் இல்லை. ப்ச் என்ன வாழ்க்கைடா”

சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தான்.

“இதுகூட பொறுத்துக்கலாம். அத்தி பூத்த மாதிரி, எங்க டீம்ல வந்து சேர்ந்தாள் நீலிமா. அழகா சிரிச்சு, அழகா பேசி, அழகா வெட்கப்பட்டு.. இப்படி எவ்வளவோ விஷயங்களை அழகா பண்ணினா. எத்தனையோ சனி, ஞாயிறு கிழமைகள்ல ரெண்டு பேரும் வெளியே சுத்தினோம். எவ்வளவோ வாங்கி கொடுத்திருக்கேன். கடைசியில என்னை அண்ணான்னு சொல்லிட்டு, புண்ணாக்கினா”

இப்போது சிவாவின் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது. அதை அவன் உணர்ந்த அடுத்த சில நொடிகளில் அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டு, யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று பார்த்தான். காக்கா, குருவிகூட அவனை சீண்டவில்லை. நொந்து கொண்டான்.

கோபம் தலைக்கேற, வானத்தைப் பார்த்து, “நீயெல்லாம் கடவுளா? எத்தனை தடவை உன்னை கோவில்ல வந்து கும்பிட்டுப் போயிருக்கேன்? எவ்வளவு அர்ச்சனை, அபிஷேகம் பண்ணிருக்கேன்? கொஞ்சமாவது என் மேல கருணை இருக்கா உனக்கு? என் மேல தப்பு இல்லாத போது எதுக்கு எனக்கு இவ்ளோ தண்டனை? ஏன் எனக்கு கிடைக்க வேண்டிய எதுவுமே கிடைக்க மாட்டேங்குது?”என்று மனதார மனதுக்குள் திட்டினான். அப்போதும் அவனை யாரும் கவனிக்கவில்லை.

உண்மையிலேயே, இந்த உலகத்தில், தான் ஒரு தனித்தீவு என்று நினைத்து, தன்னை நொந்து கொண்டான். தலையில் கை வைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்தான். இந்த நொடிப்பொழுதே கண் காணாத, யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்குப் பறந்து விடவேண்டுமென்று நினைத்தான்.

“அப்போது திடீரென அந்த இடத்தில் காற்று“உஷ்” என்ற சத்தத்துடன் பலமாக வீசத் தொடங்கியது.

தரையில் கிடந்த இலைகள் பறக்க ஆரம்பித்தன.

மரங்கள் ஆட ஆரம்பித்தன.

பறவைகள் கூவ ஆரம்பித்தன.

மழைச் சாரல் ஆரம்பித்தது.

ஏதோ ஒரு கோவிலின் மணியோசை கேட்டது. அது சங்கீதமாய் இருந்தது

இப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்த நாள் சிவா புலம்பியவரை எப்படி இருந்ததோ இன்னமும் அப்படியே சாதாரணமாகவே இருந்தது.

அப்போது யாரோ ஒரு வாலிபர், ஜாக்கிங் ஓடியபடியே சிவாவை நோக்கி வந்தார். சிவாவின் தோளைத் தட்டி, “தம்பி சிவா. என்னாச்சு இப்படி உட்கார்ந்துட்டிருக்கே?”என்று அக்கறையுடன் கேட்டார். அதை அவன் சட்டை செய்யாமலே இருந்தான்.

திடீரென உட்கார்ந்திருந்தவாறே காற்றில் மிதந்தான் சிவா. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, எதிரில் நின்று கொண்டிருந்த வாலிபரை மேலும் கீழும் கூர்ந்து கவனித்தான்.

வெள்ளை நிற டீ-சர்ட் மற்றும் பேண்ட். கால்களில்சிகப்பு நிற ஷூ. ஒரு காதில் மட்டும் ஒரு சின்ன வளையம். கண்களில் ஒரு ‘ரே பான்’ கூலிங் கிளாஸ். குறுந்தாடி. கைகளில் புரியாத டாட்டூக்கள். காதில் ஹெட் ஃபோன். அதில் ஏதோ ஒரு மொழியில் ராப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

சில நொடிகள் அந்த நபரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. அப்போது அந்த நபர் அவனை உலுக்கி, நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, “நீதானே சிவா?என்றுகேட்டார்.

ஆமா. நீங்க?

இவ்ளோ நேரம் என்னைத் திட்டிக்கிட்டு இருந்தியே. தெரியலையா?

சார், நீங்க யாருன்னே தெரியாது. நான் ஏன் உங்களைத் திட்டணும்?

அர்ச்சனை பண்ணேன், அபிஷேகம் பண்ணேன்னு இவ்ளோ நேரம் என்னை அர்ச்சனை பண்ணியே. மறந்துட்டியா?

தான் தன் மனதில் கடவுளைத் திட்டியது இவருக்கு எப்படி தெரிய வந்தது என்று தூக்கி வாரிப் போட்டது சிவாவுக்கு.

உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?தயக்கத்துடன், பயத்துடன் கேட்டான் சிவா.

வெரி சிம்பிள். நாந்தான் கடவுள். ஐ அம் தி காட் பொறுமையாகச் சொன்னார் அந்த நபர்.

சிவாவால் நம்ப முடியவில்லை. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.

உன்னோட குறைகளுக்கு என்னை ஏன் திட்டறே? உன் வேலையை நல்லபடியா முடிச்சிட்டு, நீ உன் மேனேஜர் கிட்ட அதைப் பத்தி சொன்னியா? உன் காதலை நீலிமாக்கிட்ட நீ சொன்னியா? இப்படி உன் பக்கத்துல இருந்து நீ எதுவுமே செய்யாமல், எல்லாத்துக்கும் என் மேல பழி போட்டா எப்படி நியாயம்? இது கடவுளுக்குக்கூட அடுக்காது என்று விளக்கினார் அந்த நபர்.

மனதில் நினைத்தவற்றையெல்லாம் புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.
மன்னிச்சிடுங்க காட். இனிமே இப்படி தப்பு செய்ய மாட்டேன்.. வந்தது வந்துட்டீங்க. எனக்கு ஒரு வரமாவது நீங்க கொடுக்கணும். ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சினான்.

சில நிமிடங்கள் சிவாவைக் கெஞ்சவிட்டு, பின், “ரொம்ப கெஞ்சாதே. என்ன வேணும்னு கேளு என்றார் கடவுளாகிய அந்த நபர்.

சில நிமிடங்கள் யோசித்துவிட்டு, “நான் ஏதாவது ஒரு விஷயத்தை நினைச்சுட்டு, அதை சொல்லிட்டு, அது நடக்கணும்னு சொன்னா, அது கண்டிப்பா நடக்கணும். இந்த வரத்தை மட்டும் நீங்க எனக்குக் கொடுக்கணும் என்று கெஞ்சினான்.

சரி, போய்த் தொலை, பொழச்சுப்போ. ஆனா, இந்த வரம் உயிர் இல்லாத பொருட்களை நெனச்சு சொன்னாத்தான் பலிக்கும், சின்ன விஷயங்களுக்குதான் இது பொருந்தும். ததாஸ்து என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஜாக்கிங் சென்றபடி, அப்படியே பனியில் கலந்து கரைந்து மறைந்து போனார் கடவுள்.

நடந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான் சிவா. வரத்தின் பலத்தை சோதித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, தன் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து தரையில் வைத்தான்.

என்ன சொல்லலாம் என சில நொடிகள் யோசித்துவிட்டு, பின், “இந்த பர்ஸ் முழுக்க ஆயிரம் ரூபா நோட்டுக்களால நிரம்பி வழியணும். இது நடக்கணும் என்று சொல்லிவிட்டு, தன் பர்ஸையே வெறித்துப் பார்த்தான்.

உடனே, அந்த பர்ஸுக்கு கால் முளைத்து, அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தது.


பி.கு: முடிவு புரியவில்லை என்றால் சிவா கேட்ட வரத்தை இன்னொரு முறை படிக்கவும்

No comments:

Post a Comment