Saturday 4 April 2015

நாடோடிகள்‬ (November 2014)

சன் டிவியில் இப்போது ஆயிரத்து முப்பதாவது தடவையாக ‘நாடோடிகள்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பொதுவாக சில திரைப்படங்களை ஒரு தடவை பார்த்தாலே சலித்துவிடும். சில திரைப்படங்களை பல தடவை பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ‘நாடோடிகள்’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது. இதற்கு முக்கியமான காரணம் கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வந்தது போலவே ஒரு சம்பவம் எங்கள் வாழ்வில் நிகழ்ந்ததுதான்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. கல்லூரி நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் எப்போதும் ஒரே குழுவாக இருப்போம். கூடைப்பந்து, சீட்டுக்கட்டு, கம்ப்யூட்டர் விளையாட்டுகள் போன்றவை இல்லாமல் எங்களின் நாள் முடிவடையாது.
பொறியியல் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருத்தி, அதுவும் வட இந்தியப் பெண், எங்களின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவனை சின்சியராக காதலிப்பதாகவும், ஆனால் அதற்கு இவன் அசைந்து கொடுக்காமல் இருப்பதாகவும் என் உயிர் நண்பனிடம் சொன்னாள்.
இதை விஜய் என்னிடம் சொல்ல, எப்படியாவது நண்பனை சம்மதிக்க வைத்து காதலை வாழவைக்க வேண்டும் எனத் தோன்றியது எங்கள் இருவருக்கும். உள்ளூரிலேயே யாரும் சீண்டாமல் இருந்த காலத்தில், வட இந்தியாவிலிருந்து ஒரு அப்ளிகேஷன் வருகிறது என்றால் சொல்லவா வேண்டும்? இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “ஷாஜகான்” அந்த காலகட்டத்தில்தான் வெளிவந்தது என்பதை இந்தச் சமயத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும்.
நண்பனை எப்படி வழிக்குக் கொண்டு வந்து, அவன் விக்கெட்டை எடுப்பது என்று நானும் விஜய்யும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் இன்னொரு நண்பனின் அக்காவின் திருமணம் திருநெல்வேலியில் நடக்கவிருப்பது தெரிய வர, அந்தப் பயணத்தில் எப்படியாவது நண்பனை காதலுக்கு சம்மதிக்க வைத்து, அவனை அவுட்டாக்கிவிட வேண்டுமென்று முடிவெடுத்தோம். இதற்காக ஒரு ப்ரத்யேக அண்டர்கவர் ஆப்பரேஷனை மேற்கொண்டோம் நானும் விஜய்யும்.
வேலூரிலிருந்து விழுப்புரம் சென்று, அங்கிருந்து திருநெல்வேலி செல்வது என்று முடிவு செய்து, டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் கிளம்பினோம். வழிநெடுக நண்பனை மூளைச்சலவை செய்து ரிவர்ஸ் கியரில் இருந்தவனை நியூட்ரலுக்கு கொண்டு வந்துவிட்டோம்.
திருநெல்வேலியில் கிடைத்த கேப்பிலெல்லாம் எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நாங்கள் செவ்வனே செய்து வந்து, முதல் கியர், இரண்டாம் கியர் என படிப்படியாக நண்பனை முன்னேற்றினோம். நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து சிரித்து, எங்களுக்கு அருள் புரிவதாக நினைத்தோம். அவனின்றி ஓரணுவும் அசையாதல்லவா?
இறுதியில், மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வேலூர் திரும்பியபோது நண்பனை டாப் கியர் போடவைத்திருந்தோம். அவன் விக்கெட்டை எடுத்த பவுலர்கள் நானும் விஜய்யும்தான் என்றாலும் எங்களின் மற்ற நண்பர்களும் ஃபீல்டர்களாக இருந்து பேருதவியாற்றினர்.
எங்கள் அண்டர்கவர் ஆப்பரேஷனை நல்லபடியாக செய்து முடிக்க வைத்த நெல்லையப்பருக்கும், திருச்செந்தூர் முருகனுக்கும் நன்றி சொன்னோம் நானும் விஜய்யும். ஆத்ம திருப்தி எங்களுக்கு.
இவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்பிறையாக வளர்ந்து சில வருடங்களில் தேய்பிறையாக தேய ஆரம்பித்தது. இறுதியில் பிரிந்தேவிட்டனர். எங்கள் ஆப்பரேஷன் வெற்றி பெற்றிருந்தாலும், கடைசியில் பேஷண்ட் அவுட்டாகி பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
‘நாடோடிகள்’ திரைப்படத்தில் வருவதுபோல இந்த காதல் ஜோடியை சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் நல்ல வேளை நானும் விஜய்யும் அப்போது நினைக்கவில்லை. ஒருவேளை அப்படி முயற்சிகள் செய்து, படத்தில் வருவதுபோலெல்லாம் நிகழ்ந்திருந்தால் கால் உடைந்து, காது கேட்காமல் யார் கிடப்பது!
நெல்லையப்பரும், திருச்செந்தூர் முருகனும் எங்களைப் பார்த்து அப்போது சிரித்த சிரிப்பின் அர்த்தத்தை இந்த ‘நாடோடிகள்’ படம் வெளிவந்த பிறகுதான் புரிந்துகொண்டோம் நாங்கள்.

No comments:

Post a Comment